உள்ளூர் செய்திகள்
கைது

கோவையில் ஊரடங்கு தடை உத்தரவை மீறிய 6 பேர் கைது

Published On 2022-01-24 04:24 GMT   |   Update On 2022-01-24 04:24 GMT
பீளமேடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட அவினாசி ரோடு தொட்டிப்பாளையம் சந்திப்பு, ஹோப் கல்லூரி சிக்னல், விளாங்குறிச்சி ரோடு ஆகிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 3 பேரை கைது செய்தனர்.
கோவை:

தமிழகத்தில் 3-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கையொட்டி பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர தடை விதிக்கப்பட்டது. மேலும் மருந்து கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. கோவை நகரில் முக்கிய சாலைகளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து தேவையில்லாமல் வெளியே வாகனங்களில் சுற்றுபவர்களை கண்காணித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

பீளமேடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட அவினாசி ரோடு தொட்டிப்பாளையம் சந்திப்பு, ஹோப் கல்லூரி சிக்னல், விளாங்குறிச்சி ரோடு ஆகிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம், தடை உத்தரவை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல சரவணம்பட்டி போலீசார் மணியக்காரம் பாளையம், கணபதி மாநகர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தேவையில்லாமல் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை கைது செய்தனர்.

சிங்காநல்லூர் போலீசார் வெள்ளலூர் ரோடு வழியாக ரோந்து சென்றனர். அப்போது அந்தபகுதியை சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர் தடையை மீறி கடையை திறந்து வைத்து இருந்தார். அவர் மீது போலீசார் தொற்று நோய் தடுப்பு சட்டம், ஊரடங்கை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

முழு ஊரடங்கு நாளான நேற்று வாடகை வாகனங்கள் இயங்க அரசு அனுமதி அளித்தது. மேலும் பயணிகளிடம் ஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சிங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சிங்காநல்லூர் சிக்னல் வழியாக சென்ற வாடகை கார்கள், டாக்சி, ஆட்டோ ஆகியவற்றை கண்காணித்து பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். மேலும் டிரைவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தினார்.

Tags:    

Similar News