செய்திகள்

கொடநாடு விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் பேசக்கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

Published On 2019-04-16 11:35 GMT   |   Update On 2019-04-16 11:35 GMT
கொடநாடு விவகாரம் குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் பேச கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. #MadrasHC #EdappadiPalaniswami #MKStalin
சென்னை:

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.  கடந்த 11-ந்தேதி 91 பாராளுமன்ற தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகிற 18-ந்தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற உள்ளது.  இதில் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.  ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தேர்தல் பிரசாரத்தில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.


வழக்கை விசாரித்த நீதிமன்றம், மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க. ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.  இதில், கொடநாடு விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் பேசக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்து இந்த மனு முடித்து வைக்கப்பட்டு உள்ளது.  இந்த தடையை மீறி பேசினால் நீதித்துறையில் தலையிடுவதாக கருதப்படும் என தெரிவித்து உள்ளது. #MadrasHC #EdappadiPalaniswami #MKStalin

Tags:    

Similar News