உள்ளூர் செய்திகள்
‘இன்னுயிர் காப்போம்‘ திட்டத்தில் உடுமலை மருத்துவமனை இணைப்பு
டிரைவர்களின் அஜாக்கிரதை, கவனச்சிதறல், அதிக பணிச்சுமை, நெருக்கடிநிலை போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுகிறது.
உடுமலை:
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டுதல், அதிகம் விபத்து நடக்கும் இடங்களை தேர்வு செய்து சாலை வடிவமைப்புகளை மாற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும் டிரைவர்களின் அஜாக்கிரதை, கவனச்சிதறல், அதிக பணிச்சுமை, நெருக்கடிநிலை போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இருப்பினும் ஏற்கனவே அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் வழியிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இதனைத்தவிர்க்க அரசால், ‘இன்னுயிர் காப்போம்‘ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் உடுமலை நகரில் ஒரு தனியார் மருத்துவமனை இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது:
விபத்தில் சிக்கியவர்கள் எவராக இருந்தாலும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணிநேரத்திற்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் நோயாளி நிலையற்றவராக இருந்து தொடர் சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கான கட்டணத்தில் ஒரு லட்சம் ரூபாயை அரசு ஏற்கிறது. அவ்வகையில் உடுமலை நகரில் லாவண்யா மருத்துவமனையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினர்.