செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசிய போது எடுத்த படம்.

தமிழகத்தில் அதிமுக பெயரில் பா.ஜ.க.தான் மறைமுகமாக போட்டியிடுகிறது- முத்தரசன் பேட்டி

Published On 2021-03-30 15:44 GMT   |   Update On 2021-03-30 15:44 GMT
தமிழகத்தில் அ.தி.மு.க. பெயரில் பா.ஜ.க.தான் போட்டியிடுகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
சத்தியமங்கலம்:

பவானிசாகர் தொகுதியில் இந்திய கம்பயூனிஸ்டு கட்சி சார்பில் பி.எல்.சுந்தரம் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு கேட்டு சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. மத்திய அரசுக்கு இணக்கமாக இருக்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். மாநில உரிமைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்ட ரீதியாக பெற வேண்டிய நிதியை குறிப்பாக புயல் மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு நிவாரண நிதியை கூட பெற முடியவில்லை. நமது முதல்-அமைச்சர் இப்போது பா.ஜ.க. உடன் சேர்ந்து சாமியார் ஆகிவிட்டார். ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என சாபம் விடுகிறார்.

தமிழ்நாட்டில் நேரடியாகவும், மறைமுகமாகவும் அ.தி.மு.க. என்ற பெயரில் பா.ஜ.க.தான் போட்டியிடுகிறது. எடப்பாடி எப்படி முதல்-அமைச்சர் ஆனார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல்-அமைச்சர் பதவியை ஏலம் எடுத்தவர் அவர். வருமானவரித்துறையினர் சமீபகாலமாக சங்பரிவார் அமைப்பாக மாறி விட்டது. தி.மு.க. கூட்டணியின் வெற்றியை தடுப்பதற்காக குறுக்கு வழியில் பா.ஜ.க. முயற்சிக்கிறது.

எதிரிகளை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாத இவர்கள்...ஆட்சிக்கு மீண்டும் வந்தால் கவலைப்படவார்களா?

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசல் அருகே தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
Tags:    

Similar News