செய்திகள்
ஒகேனக்கல் மெயின் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2021-10-13 05:14 GMT   |   Update On 2021-10-13 05:14 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது
பென்னாகரம்:

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களாக கர்நாடக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 16ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாகவும் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி ஆற்றில் நீர் வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Tags:    

Similar News