செய்திகள்
ஒரத்தநாடு அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை- பணம் திருடிய வாலிபர் கைது
ஒரத்தநாடு அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை- பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாட்டை அடுத்துள்ள திருமங்கலக்கோட்டை மேற்கு கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி ஜெயம்(வயது73). கடந்த 10-ந்தேதி ஜெயம் பக்கத்து வீட்டுக்கு சென்ற போது இவரது வீட்டுக்குள் பட்டப்பகலில் புகுந்த மர்ம ஆசாமி வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசாரின் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கோபிசரன் (28) ஜெயம் வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெளியூரில் பதுங்கி இருந்த கோபிசரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள கோபிசரன் மீது பல போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது.