செய்திகள்
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்தலாம் -நிபுணர் குழு பரிந்துரை

Published On 2021-04-12 11:07 GMT   |   Update On 2021-04-12 11:07 GMT
வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்று ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பொது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இதுவரை 10 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. என்றாலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இதற்காக மேலும் 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. அதில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் ஒன்றாகும். இந்தியாவில் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்ய டாக்டர் ரெட்டி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது.



இதுதொடர்பாக கடந்த 1-ந் தேதி மத்திய நிபுணர் குழு கூடி ஆய்வு செய்தது. அதில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் மீண்டும் நிபுணர் குழு இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில், இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் விண்ணப்பத்திற்கும் ஒப்புதல் வழங்கியது. 

இந்த பரிந்துரையை பரிசீலனை செய்து, மருந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) விரைவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த தடுப்பூசியையும் இரண்டு கட்டங்களாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News