செய்திகள்
கைது

நாகைக்கு தனியார் ஆம்புலன்சில் கடத்திய ரூ.1 கோடி கஞ்சா மூட்டை பறிமுதல் - வாலிபர் கைது

Published On 2021-11-03 11:50 GMT   |   Update On 2021-11-03 11:50 GMT
ஆந்திராவிலிருந்து நாகைக்கு தனியார் ஆம்புலன்சில் கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா மூட்டையை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்:

ஆந்திராவிலிருந்து நாகைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக தஞ்சை மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் ஜெயசந்திரன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, ஏட்டுகள் இளையராஜா, சுந்தர்ராமன், விஜய், ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் இன்று காலை நாகை மாவட்டம் அரசு மருத்துவமனை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஆந்திராவிலிருந்து வந்த தனியார் ஆம்புலன்சை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்குப் பின் முரணான தகவலை ஓட்டுனர் கூறியதால் ஆம்புலன்சை சோதனையிட்டனர்.

அப்போது 5 மூட்டைகளில் சுமார் 200 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேலும் விசாரணை நடத்தியதில் ஆந்திராவிலிருந்து நாகைக்கு கஞ்சாவை கடத்தி வந்து பின்னர் கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்க இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தஞ்சாவூர் சரக தனிப்படையினர் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மார்சல் டெரன்ஸ் ராஜா என்பவரை கைது செய்து, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகள் மற்றும் ஆம்புலன்சையும் பறிமுதல் செய்தனர். 


Tags:    

Similar News