சகோதரருக்கு தொற்று உறுதி: கொரோனா பரிசோதனைக்கு பயந்து மூதாட்டி தீக்குளிப்பு
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளை அருகே உள்ள கீழநத்தத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கோமதி (வயது 74).
இவரது சகோதரர் கே.டி.சி.நகரில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமதி தம்பி வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார்.
இந்நிலையில் அவரது தம்பிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி ஆனது. இதனைத்தொடர்ந்து அவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரது வீட்டில் தங்கி இருந்த கோமதிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் முடிவு செய்தனர்.
அந்த வகையில் நேற்று கோமதி கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதராத்துறையினர் கூறி இருந்தனர். இதற்கு பயந்த கோமதி வீட்டில் இருந்தபோது மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து உடனே தீயை அணைத்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.