உண்மை எது
தாஜ் மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாக வைரலாகும் பகீர் தகவல்
தாஜ் மகால் கட்டுமான பணிகளில் ஈடுபட்டவர்களின் கைகளை ஷாஜகான் துண்டித்தார் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13 ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது, கோயிலை தூய்மையாக வைத்துக் கொள்ளும் தூய்மை பணியாளர்கள் மீது மலர்களை வீசி பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தனியார் நிறுவன செய்தியாளர் ஷாஜகானுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டார். அதில், 'பிரதமர் மோடி தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் நிலையில், ஷாஜகான் தாஜ் மகால் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களின் கைகளை துண்டித்தார்,' என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதே தகவலை மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் மற்றும் பலர் தங்களின் டுவிட்டரில் பதிவிட்டனர். இதுகுறித்த இணைய தேடல்களில், 'ஷாஜகான் பணியாளர்களின் கைகளை துண்டித்ததை கூறும் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை. இந்த தகவல் வாய் வார்த்தையாக பலர் கூறி கேட்டிருக்கிறேன்.' என வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபிப் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அந்த வகையில் ஷாஜகான் பணியாளர்களின் கைகளை துண்டித்ததாக கூறும் தகவல் ஆதாரமற்றது என உறுதியாகிவிட்டது.