செய்திகள்
லக்கிம்பூர் வன்முறை சம்பவம்: மத்திய இணை அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 3 நாள் போலீஸ் காவல்
விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷை 3 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உத்தர பிரதேச மாநில துணை முதல்வர், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா அரசு விழாவில் கலந்து கொள்ள சென்றனர். அப்போது விவசாயிகள் லக்கிம்பூர் பகுதியில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அஜய் மிஸ்ரா உடன் வந்த கார் ஒன்று திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில் இரண்டு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பின் வன்முறை ஏற்பட்டது. மொத்தமாக 8 பேர் உயிரிழந்தனர்.
விவசாயிகள் கூட்டத்தில் புகுந்த காரில் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் இருந்தார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் உ.பி. போலீசார் ஆஷிஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இன்று ஆஷிஷ் மிஸ்ரா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது போலீசார் ஆஷிஷ் மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில் நிபந்தனைகளுடன் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.