கள்ளக்குறிச்சி அருகே மது குடிப்பதற்காக இரும்பு கடையில் திருடிய வாலிபர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் கரீம்ஷா தர்க்கா பகுதியை சேர்ந்தவர் சையத் உசேன் (வயது 42). இவர் இதே பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு வழக்கமாக கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மறுநாள் அதி காலை 5 மணியளவில் தனது நண்பர்களுடன் கலையநல்லூர் சாலையில் உள்ள டீக் கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் பழைய இரும்பு கடையில் இரும்புகளை திருடியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சையத் உசேன் தனது நண்பர்களுடன் சென்று அந்த நபரை மடக்கி பிடித்து தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (வயது 20) என்பதும், சுமார் 2 மாதத்திற்கு முன்பு இந்த பழைய இரும்பு கடையில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது.
மேலும் தற்போது மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான 25 கிலோ எடையுள்ள பழைய இரும்புகளை திருடியது தெரியவந்தது. இது குறித்து சையத் உசேன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.