செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் சாமிக்கு அணிவிக்கும் மலர் மாலைகளிலிருந்து ஊதுபத்தி தயாரிக்க திட்டம்

Published On 2021-07-22 08:08 GMT   |   Update On 2021-07-22 09:54 GMT
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயுர்வேதப் பொருட்கள் தயாரிப்புக் கூடம் மூலம் 115 வகையான பொருட்களை தயார் செய்ய தேவஸ்தானத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜசாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

இந்த கோவில்களில் சாமி அலங்காரத்திற்காக தினமும் ஏராளமான மலர்மாலைகள் சமர்பிக்கப்படுகின்றன. மாலைகள் தினமும் மாற்றப்பட்டு புதிய மாலைகள் சமர்பிக்கப்படுகின்றன.

மாற்றப்படும் மலர் மாலைகளின் புனிதத்தன்மை கருதி மிகவும் பாதுகாப்பான முறையில் அவற்றை தேவஸ்தனம் அப்புறப்படுத்துகிறது. இந்த நிலையில் அணிவிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும் மாலைகளை பயன்படுத்தி ஊதுபத்திகள் தயார் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


பெங்களூரை சேர்ந்த புகழ்பெற்ற தனியார் ஊதுபத்தி தயாரிப்பு நிறுவனம் ஒன்று லாப நோக்கம் இல்லாமல் தேவஸ்தான கோவிலில் பயன்படுத்தப்பட்ட மலர் மாலைகளை கொண்டு ஊதுபத்தி தயாரித்து தேவஸ்தானத்திற்கு வழங்க முன்வந்துள்ளது.

மலர்மாலைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஊதுபத்திகளை அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள லட்டு கவுன்டர்களில் பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயுர்வேதப் பொருட்கள் தயாரிப்புக் கூடம் மூலம் 115 வகையான பொருட்களை தயார் செய்ய தேவஸ்தானத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இது தவிர மேலும் 70 வகையான பொருட்களை தயார் செய்ய ஆயுஷ் அமைச்சகத்திடம் தேவஸ்தானம் ஒப்புதல் கோரியுள்ளது.

Tags:    

Similar News