உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் கொரோனா விதிகளை மீறிய 435 பேருக்கு அபராதம்
தூத்துக்குடியில் முகக்கவசம் அணியாமல் சுற்றுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நிற்பது உள்ளிட்ட கொரோனா விதிமீறலுக்கு நேற்று ஒரே நாளில் 435 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தற்போது ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொது இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா ரூ. 200- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு தலா ரூ.500- அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 67 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 49 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 27 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 37 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 46 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 146 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 26 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 37 பேர் மீதும் என மொத்தம் 435 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.87,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நம்மையும் காப்பாற்றி, நம்மால் பிறருக்கு தொற்று பரவாமல் பிறரையும் காப்பாற்ற வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.