செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ராதிகா சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த காட்சி.

வருமானவரி சோதனை எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான்- நடிகை ராதிகா பேட்டி

Published On 2021-04-03 20:43 GMT   |   Update On 2021-04-03 20:43 GMT
எங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று திருவண்ணாமலையில் நடிகை ராதிகா சரத்குமார் கூறினார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடிகை ராதிகா சரத்குமார் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் மவுனபுரட்சி செய்ய உள்ளனர். அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்று தான் நானும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

ஜெயலலிதாவிற்கு பிறகு அ.தி.மு.க., பா.ஜ.க.விற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், கூட்டணி வைத்துள்ளதும் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் கலைத்துறையினருக்கு அ.தி.மு.க. ஆட்சி ஏதும் செய்யவில்லை. வருமான வரி சோதனை என்பது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று தான்.

கடந்த முறை எங்களது இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த வருமான வரித் துறையினரின் சோதனையை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தகவலின் அடிப்படையில்தான் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

தி.மு.க.வினர் நல்லவர்கள் போல் போர்வையை போர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். தங்கள் கட்சியினரை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் தன்மை தி.மு.க. தலைமைக்கு இல்லை. தி.மு.க.வில் நகைச்சுவை பேச்சாளர்கள் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்கள் என அனைவருமே பெண்களை தரக்குறைவாக பேசுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இது போன்றவர்கள் ஆட்சிக்கு வருவது நம்ப முடியாததாக இருக்கிறது. ஜெயலலிதா இருந்த போது பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. தமிழகத்தில் பா.ஜ.க. மீது மக்களுக்கு பெரிய அளவில் பற்றோ, பிடிப்போ இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News