ரொனால்டோவிடம் ரூ.579 கோடி நஷ்டஈடு கேட்கும் மாடல் அழகி
பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர் மீது அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி கேத்ரீன் மையோர்கா பாலியல் புகார் தெரிவித்தார்.
2009-ம் ஆண்டு லாஸ் வேகாசில் உள்ள ஓட்டல் ஒன்றில் தன்னை ரொனால்டோ பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டினார். இந்த புகாரை கேத்ரீன் மையோர்கா 2018-ம் ஆண்டு தெரிவித்தார்.
இதை ரொனால்டோ மறுத்தார். இருதரப்பின் விருப்பத்துடன் கூடிய உறவு தான் என்று ரொனால்டோ தரப்பினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரொனால்டோவை விடுவிப்பதாக கடந்த 2019-ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்தநிலையில் இவ்விவகாரத்தை கேத்ரீன் மையோர்கா மீண்டும் கிளப்பி உள்ளார். அவர் ரொனால்டோவிடம் 56 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.579 கோடி) நஷ்டஈடு கோரி உள்ளார்.
கடந்த கால வலி மற்றும் துன்பங்கள், எதிர்கால வலி மற்றும் துன்பங்கள், சட்ட ரீதியான கட்டணம் ஆகியவற்றுக்காக நஷ்டஈட்டை கேத்ரீன் மையோர்கா கேட்டுள்ளதாக இங்கிலாந்தின் மிரர் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது.