உள்ளூர் செய்திகள்
கைதான சாமுவேல்.

பிரார்த்தனை செய்வதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை - மதபோதகர் கைது

Published On 2022-01-07 09:47 GMT   |   Update On 2022-01-07 09:47 GMT
தலைமறைவாக இருந்த சாமுவேலை நேற்று போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 31), மதபோதகரான இவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். 

அதன்பேரில் போலீசார் சாமுவேல் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் சாமுவேல் தலைமறைவாகிவிட்டார். 

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சாமுவேலை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் சாமுவேலை உடுமலை கிளை சிறையில் அடைத்தனர். 

முன்னதாக அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

மதபோதகரான  சாமுவேல் வீரபாண்டி பகுதியில் சிறிய அளவில் சர்ச் அமைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் அங்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பொதுமக்களின் மனகஷ்டங்களை தீர்க்க வீடு வீடாக சென்றும் பிரார்த்தனை செய்து வந்தார். 

இந்தநிலையில் பாலியல் தொல்லைக்கு உள்ளான 16 வயது சிறுமி சாமுவேல் சர்ச்சுக்கு அருகே உள்ள பள்ளியில்10-ம்வகுப்பு படித்து வந்தார். மேலும் அப்பகுதியில் சிறுமியின் பாட்டி வீடும் உள்ளது. தினமும் மாலை பள்ளி முடிந்ததும் சிறுமி, பாட்டி வீட்டிற்கு சென்று விட்டு அதன்பிறகு பெற்றோர் வீட்டிற்கு செல்வார். 

இந்தநிலையில் சிறுமியின் பாட்டி வீட்டிற்கு சாமுவேல் அடிக்கடி சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது சிறுமியும் பங்கேற்றுள்ளார். ஒரு முறை சாமுவேல் பிரார்த்தனை செய்ய வந்த போது வீட்டில் சிறுமியின் பாட்டி இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தாள். 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட சாமுவேல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் சிறுமி, சாமுவேல் பிரார்த்தனைதான் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டார். 

மற்றொரு முறை சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த சாமுவேல் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன்பிறகே சிறுமிக்கு சாமுவேல் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. 

உடனே இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவே, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் சாமுவேல் சிக்கிக்கொண் டார். கைதான சாமுவேல் வேறு யாரிடமாவது இது போல் நடந்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிரார்த்தனை செய்வதாக கூறி சிறுமிக்கு மதபோதகர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News