உள்ளூர் செய்திகள்
வீட்டில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சேலம் அன்னதானப்பட்டியில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி பொடரங்காடு, மணியனூர் காத்தாயம்மாள் நகர் பகுதிகளில் சிலர் ரேஷன் அரிசியை திருட்டுத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சேலம் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு நடந்த சோதனையில் காத்தாயம்மாள் நகர் பகுதியில் ஒரு வீட்டில் 30 மூட்டைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த போலீசார் தொழிலாளி கண்ணன் ( வயது 41) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து ஓட்டல்களுக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.