கோவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
கோவை:
கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன் பாளையத்தில் சிலர் கஞ்சா விற்பதாக துடியலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். உடனடியாக அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவர் காந்திபுரத்தை சேர்ந்த பாரத்(25) என்பதும், கஞ்சா விற்பதற்காக அங்கு சுற்றிதிரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி- கோட்டூர் ரோட்டில் உள்ள பாலத்திற்கு கீழ் கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் வரவே சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்க நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பொள்ளாச்சி மாடப்பட்டியை சேர்ந்த கருணாகரன்(41) என்பதும், கஞ்சா விற்க நின்றிருந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் மீது அடிதடி, கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 200 கிராம் கஞ்சா, ரூ.200 பறிமுதல் செய்தனர்.