உள்ளூர் செய்திகள்
மூதாட்டி பாப்பம்மாள்

செங்கோட்டை மூதாட்டி கொலையில் தொழிலாளி கைது

Published On 2022-01-13 08:55 GMT   |   Update On 2022-01-13 08:55 GMT
செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரத்தை சேர்ந்த பாப்பம்மாள் என்ற மூதாட்டியை கோடாரியால் தலை துண்டித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி பாப்பம்மாள்(வயது 62).

இவருக்கும், அவரது உறவினரான பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன்(42) என்பவர் குடும்பத்திற்கும் இடையே  இடத்தகராறு இருந்து வந்தது.

நேற்று ஏற்பட்ட தகராறில் முருகன், கோடாரியால் பாப்பம்மாள் தலையை துண்டித்து கொலை செய்தார். பின்னர் தலையை பாப்பம்மாளின் உறவினர் வீட்டு முன்பு வீசிவிட்டு புளியரை போலீசில் சரண் அடைந்தார்.

இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முருகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-&

எனக்கு பாப்பம்மாள் சித்தி முறை. எங்கள் 2 பேரின் வீட்டுக்கும் இடையே பொதுச்சுவர் இருந்தது. அதில் ஒரு புறத்தை இடித்துவிட்டு நான் வாசல் விட்டேன்.

 இதனால் பாப்பம்மாள் என்னையும், எனது குடும்பத்தினரையும் கடந்த ஒரு வாரமாக திட்டிக்கொண்டு இருந்தார்.

நேற்று காலையிலும் எனது மனைவி மகாலெட்சுமி மற்றும் எனது தாயார் ஆகியோரை பாப்பம்மாள் திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கோடாரியை எடுத்துக்கொண்டு அவரை கொலை செய்ய அவரது வீட்டுக்கு சென்றேன். 

அங்கு அவர் இல்லை. அவர் ரேஷன் கடைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க சென் றதை அறிந்த நான் அவர் வரும் வழியில் பதுங்கி இருந்தேன். 

பால்பண்ணை தெரு வழியாக அவர் வீட்டுக்கு நடந்த வந்து கொண்டிருந்தார். உடனே நான் எனது கையில் இருந்த கோடாரியால் வெட்டிக் கொன்றேன்.  ஆனாலும் எனக்கு ஆத்திரம் தீரவில்லை. 

இதனால் அவரது தலையை துண்டாக வெட்டி எடுத்துச் சென்று அவரது அண்ணன் வீட்டு முன்பு சாக்கடையில் வீசி விட்டு வந்து சரண் அடைந்துவிட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனை போலீசார் வாக்கு மூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Tags:    

Similar News