உள்ளூர் செய்திகள்
கவுண்டம்பாளையம் அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எம் மையத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
கோவை:
கோவை கவுண்டம்பாளையம் அடுத்த இடையர்பாளையம் சிவாஜி காலனியில் அரசு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் அமைந்துள்ள பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அந்த ஏ.டி.எம் மையத்தில் புகுந்த மர்ம நபர் திடீரென ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தார். அப்போது அலாரம் ஒலித்தது. அந்த ஏ.டி.எம் மையத்தின் மேலாளருக்கும் தகவல் சென்றது.
ஏ.டி.எம்-மில் அலாரம் ஒலிக்கும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை கண்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.பின்னர் இதுகுறித்து வங்கி மேலாளர் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எம் மையத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காமிராவை ஆய்வு செய்தனர்.
இைதயடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வந்தனர். விசாரணையில் வேலாண்டிப்பாளையம் கொங்குசாமி நாயுடு 3-வது வீதியை சேர்ந்த தனியார் பள்ளி பஸ் கிளீனர் சுரேந்தர் (வயது 23) என்பவர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சுரேந்தரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.