செய்திகள்
பொள்ளாச்சியில் 2 இடங்களில் ஓட்டுப்போட்ட வாலிபர் மீது வழக்கு
பொள்ளாச்சியில் 2 இடங்களில் ஓட்டுப்போட்ட வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
உடுமலை சட்டப்பேரவை தொகுதியில் சூளேஸ்வரன்பட்டியில் பாகம் எண் 74-ல் 2 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 51-ல் சம்சுதீன் என்பவர் இரண்டு வாக்குசாவடிகளிலும் தனது வாக்கினை பதிவு செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியும் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் ரங்கநாதன் என்பவர் உடுமலை சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அலுவலர் பாஸ்கரன் இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்சுதீனுக்கு 2 பூத்துகளில் வாக்கு இருந்துள்ளது. இரண்டு இடங்களிலும் ஓட்டுபோட்டுள்ளது தெரியவந்துள்ளது.