செய்திகள்
தற்கொலை செய்த சுரேஷ்.

ஆன்லைன் சீட்டு விளையாட்டில் ரூ. 5 லட்சத்தை இழந்த டெய்லர் தற்கொலை

Published On 2021-11-25 10:38 GMT   |   Update On 2021-11-25 10:38 GMT
கடன் பிரச்சினையால் இந்த முடிவை எடுக்கிறேன் என்று சுரேஷ் உருக்கமாக எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் பாளையக்காடு கோல்டன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 

நேற்று முன்தினம் சுரேசின் மனைவி பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஆளில்லாததால் சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து  கொண்டார்.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், சுரேஷ், ஆன்லைன் மூலமாக சீட்டு விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதில் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை இழந்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.  

மேலும் சுரேஷ் வீட்டில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.அதில் வீடு கட்ட வைத்திருந்த பணத்தை ஆன்லைனில் சீட்டு விளையாடி இழந்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். மனைவி, குழந்தைகளை காப்பாற்றுங்கள். கடன் பிரச்சினையால் இந்த முடிவை எடுக்கிறேன் என்று உருக்கமாக எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
Tags:    

Similar News