லைஃப்ஸ்டைல்
இடுப்பு சதை அதிகமானால் ஏற்படும் பாதிப்பு

இடுப்பு சதை அதிகமானால் ஏற்படும் பாதிப்பு

Published On 2020-01-29 06:35 GMT   |   Update On 2020-01-29 06:35 GMT
உடலின் இடுப்புப் பகுதியில் கூடுதல் சதை போடாமல் பார்த்துக் கொள்வது அவசியம், இல்லை எனில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் எச்சரிக்கின்றன.
மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்தவர் தங்கள் உடலின் இடுப்புப் பகுதியில் கூடுதல் சதை போடாமல் பார்த்துக் கொள்வது அவசியம், இல்லை எனில் மீண்டும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் எச்சரிக்கின்றன. ஏற்கெனவே வந்த ஆய்வுகள் வயிறு, இடுப்புப் பகுதி பருமன் அதிகரிப்பினால் முதல் முறை மாரடைப்பு ஏற்படும் அபாயத்தினை சுட்டிக்காட்டி உள்ளன.

ஆனால் ஒருமுறை இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்து வாழ்ந்து வருபவர்களுக்கு இடுப்புச் சதை, அடிவயிறு சதை கூடினால் மீண்டும் மாரடைப்பு ஏற்படுமா? என்பது இதுவரை அறியப்படாத ஒன்றாக இருந்து வந்தது. பொதுவாக மாரடைப்பு ஏற்பட்ட பிறகே நோயாளிகள் கடும் மருத்துவ சிகிச்சை நடைமுறையை பின்பற்றுகின்றனர். இதற்கு இரண்டாம் நோய்த்தடுப்பு உத்தி என்று பெயர்.



இந்த கால கட்டத்தில் ஸ்ட்ரோக், மாரடைப்பு ஏற்படுத்தும் காரணிகளான ரத்தத்தில் அதிக சர்க்கரை, கொழுப்புகள், ரத்தக் கொதிப்பு ஆகியவை குறைக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆய்வை சுவீடனில், முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த 22 ஆயிரம் நோயாளிகளிடம் நடத்தப்பட்டது. அடிவயிறு, இடுப்பு பருமன் என்பதை இடுப்பு பகுதி சுற்றளவை மதிப்பிடுவதன் மூலம் அறிகின்றனர். ரத்த நாளங்களில் அடைப்பு, உயிரைப்பறிக்கும் மாரடைப்பு, அல்லது உயிரைப் பறிக்காத மாரடைப்பு நிகழ்வுகள், சந்தர்ப்பங்கள் இந்த ஆய்வில் உற்று நோக்கப்பட்டன.

அந்த 22 ஆயிரம் நோயாளிகளில் ஆண்களில் 78 சதவீதமும், பெண்களில் 90 சதவீதம் நபர்களுக்கும் இடுப்பு பகுதியில் அதிகமாக சதை போட்டிருந்தது. அதாவது இடுப்பின் சுற்றளவு பெருகியிருந்தது. இதனால் ஸ்ட்ரோக், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் இன்னும் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது, அதாவது புகைப்பிடித்தல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு, பி.எம்.ஐ. உள்ளிட்ட மற்ற காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே இவர்களுக்கு அதிகப்படியான இடுப்பு சதையினால் ஸ்ட்ரோக், மாரடைப்பு ஏற்படும் சாத்தியக் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதில் இடுப்பின் சுற்றளவு என்பது ஒரு முக்கியமான அடையாளமாக உள்ளது என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
Tags:    

Similar News