செய்திகள்
ப.சிதம்பரம் (கோப்பு படம்)

ப.சிதம்பரம் ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

Published On 2019-09-30 10:05 GMT   |   Update On 2019-09-30 10:57 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர்.



பின்னர், அவரை செப்டம்பர் 5-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது சில நாட்கள் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவரும் ப.சிதம்பரம் செல்வாக்கு படைத்த நபர் என்பதால் அவரை விடுதலை செய்தால் சாட்சிகளை கலைத்து, சில ஆதாரங்களை அழித்து விடுவார் என ஜாமீன் மனுவின் மீது வாதாடிய சி.பி.ஐ. வழக்கறிஞர் துஷார் மேத்தா குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News