ஆன்மிகம்
தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகன் காட்சி தரும் தலம்
முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற சிறப்புமிக்க தலம் திருப்பரங்குன்றம். இங்கு தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானது, திருப்பரங்குன்றம் திருத்தலம். சூரபதுமனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தேவர்களை, அந்த அசுரனை வதம் செய்து விடுவித்தார், முருகப்பெருமான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, தேவேந்திரன் தன்னுடைய மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்தான். அதன்படி முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற சிறப்புமிக்க தலம் இது. இங்கு தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
ஆனாலும் அந்த உருவம் புடைப்புச் சிற்பமாக இருப்பதால், ஞானத்தின் அடையாளமாக கருதப்படும் வேலுக்குத் தான் இங்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆரம்ப காலத்தில் இங்கு வேல் வழிபாடு மட்டுமே இருந்ததாக கூறுப்படுகிறது. இங்கு சரவணப்பொய்கை, லட்சுமி தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. திருமணத் தடை இருப்பவர்கள், இந்தக் கோவிலுக்கு திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வந்து வழிபாடு செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும். பவுர்ணமி நாட்களில், திருப்பரங்குன்றம் மலையை வலம் வந்தால் நன்மைகள் பலவும் கிடைக்கும்.