செய்திகள்
விழாவில் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் திருப்பூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

Published On 2021-09-25 11:54 GMT   |   Update On 2021-09-25 11:54 GMT
முதல் - அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன.
திருப்பூர்:

தமிழ்நாடு முதல் - அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு 3-ம் ஆண்டு விழா திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் முன்னிலை வகித்தார். 

விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பேசியதாவது:-

முதல் - அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு 3-ம் ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. அதை சிறப்பிக்கும் விதமாக திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 3 அரசு மருத்துவமனைகள், 28 தனியார் மருத்துவமனைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கூடுதலாக 4 அரசு மருத்துவமனைகளிலும், 1 தனியார் மருத்துவமனையிலும் இந்த திட்டத்தின் கீழ் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 40 ஆயிரத்து 178 பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக மொத்தம் ரூ.92 கோடியே 64 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. 1,451 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கும் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மேற்கொண்டு பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார். முன்னதாக 27 பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளை அமைச்சர் வழங்கினார். மேலும் 4 அலுவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்ததற்காக நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

இந்த திட்டத்தில் பயன் அடைந்தவர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மூலம் நடைபெற்ற பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மரக்கன்று நடும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். 

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) பாக்கியலட்சுமி மற்றும் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், நிர்வாகி திலகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News