செய்திகள்
இங்க எல்லோரும் தடுப்பூசி போட்டாச்சு - இதை நம்பலாமா?
இந்த மாநிலத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக கூறி வைரலாகும் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் 18-வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகளவில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்தந்த அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் 100 சதவீத தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் சிக்கிம் முதலிடம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிக்கிம் மாநில செய்தி நிறுவனங்கள் இதுபற்றிய செய்திகளை பரவலாக வெளியிட்டு வருகின்றன.
இதுகுறித்த இணைய தேடல்களில் சிக்கிம் மாநிலத்தில் இதுவரை 5,19,996 பேர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளனர். இரு டோஸ்களையும் 4,16,372 பேர் செலுத்திக் கொண்டனர். அம்மாநில மக்கள் தொகையில் சுமார் 99 சதவீதம் பேர் முதல் டோஸ், சுமார் 78 சதவீதம் பேர் இரு டோஸ்களை செலுத்திக் கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதுபற்றிய விவரங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சிக்கிம் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்டவில்லை என உறுதியாகிவிட்டது.