செய்திகள்
மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
மணீஷ் பாண்டே, விஜய்சங்கரின் பொறுப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்.
துபாய்:
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததது.
அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ராபின் உத்தப்பா 19 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் 30 ரன், பட்லர் 9 ரன், ஸ்மித் 19 ரன், ரியான் பராக் 12 பந்தில் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்துள்ளது. ஆர்ச்சர் 16 ரன்னும், திவாட்டியா 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ஐதராபாத் அணியில் சேர்க்கப்பட்ட ஹோல்டர் 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
வார்னர் 4 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து பேர்ஸ்டோவ் 10 ரன்னில் வெளியேறினார். இருவரையும் ஆர்ச்சர் அவுட்டாக்கினார். 16 ரன்னுக்குள் 2 விக்கெட்டை இழந்து ஐதராபாத் திணறியது.
அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டேவு, விஜயசங்கரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
மணீஷ் பாண்டேகிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். அவருக்கு விஜயசங்கர் நன்கு ஒத்துழைப்பு வழங்கினார். இருவரும் அரை சதமடித்து அசத்தியதுடன், 140 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மணீஷ் பாண்டே 8 சிக்சர், 4 பவுண்டரியுடன் 83 ரன்னும், விஜயசங்கர் 6 பவுண்டரியுடன் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆட்டநாயகன் விருதை மணீஷ் பாண்டே பெற்றார்.
இது ஐதராபாத் அணி பெற்ற 4வது வெற்றி ஆகும். இதன்மூலம் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.