ஆன்மிகம்
ராமேசுவரம் ராமநாதசாமி

ராமேசுவரம் கோவிலில் இன்று சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

Published On 2021-08-12 07:50 GMT   |   Update On 2021-08-12 07:50 GMT
ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் அம்பாள் பல வாகனங்களில் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றன. அதுபோல் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாகவும், பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காகவும் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலில் நடந்து வரும் ஆடித்திருவிழாவின் 10-வது நாள் மற்றும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10-ம்தேதி பர்வதவர்த்தினி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைதொடர்ந்து சிவதீர்த்தத்தில் அம்பாள் தீர்த்தமாடும் நிகழ்ச்சி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றன.

திருவிழாவின் 11-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் வைத்து நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு 7 முதல் 8 மணிக்குள் கோவிலின் தெற்கு கோபுர வளாகப் பகுதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியை காணவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 17-ந்தேதி அன்று சுவாமி அம்பாள் மறு வீட்டிற்கு அதாவது கந்தமாதன பர்வதம் மண்டகப்படி செல்லும் நிகழ்ச்சியும் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது ராம தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டபத்தில் வைத்து வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் 2-வது ஆண்டாக மாலை மாற்றும் நிகழ்ச்சி கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News