தொழில்நுட்பம்
பாஜி

பப்ஜிக்கு மாற்றாக இந்திய கேம் தயார் - விரைவில் வெளியாகும் என தகவல்

Published On 2020-09-05 06:35 GMT   |   Update On 2020-09-05 06:35 GMT
பப்ஜி மொபைல் கேமிற்கு மாற்றாக இந்திய கேம் தயார் நிலையில் இருப்பதாகவும் விரைவில் இது வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதனிடையே சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் பப்ஜி எனப்படும் செல்போன் விளையாட்டு செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதித்தது.  இதனை தொடர்ந்து கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி உள்ளிட்ட செயலிகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில், பப்ஜிக்கு பதிலாக அதற்கு இணையான புதிய கேம் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தி திரையுலகின் பிரபல நடிகர் அக்ஷய் குமார் தலைமையில், முன்னாள் பேட்மிண்டன் விளையாட்டு வீரர் புல்லேலா கோபிசந்த் ஆகியோர் இணைந்து பப்ஜிக்கு பதிலாக புதிய கேம் ஒன்றை அறிமுகமாக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.



பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் என்கோர் கேம்ஸ் நிறுவனம் விரைவில் ஒரு புதிய பாஜி (பியர்லெஸ் அண்டு யுனைட்டெட்  கார்ட்ஸ்) என்ற கேமை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இதில் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதம் பாரத் கே வீர் தொண்டு அமைப்புக்கு நன்கொடையாக வழங்கப்படும் என கூறியுள்ளார். இதன்படி, தேச பாதுகாப்பு பணியில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக இந்த நிதி பயன்படும்.

புது கேம் பற்றி அதிகளவு தகவல்கள் இல்லாத நிலையில், பெரும்பாலும் இது பப்ஜி போன்றே இருக்கும் என எதிர்பார்க்ப்படுகிறது. பப்ஜி மொபைலுக்கு மாற்றான புதிய பாஜி கேம் டீசர் படமும் இதையை உணர்த்துவதாக அமைகிறது.
Tags:    

Similar News