செய்திகள்
போராட்டம்

மத்திய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் நாளை பஸ், ரெயில் மறியல்

Published On 2021-09-26 13:26 GMT   |   Update On 2021-09-26 13:26 GMT
தஞ்சை மாவட்டத்திலும் பஸ் மறியல்,ரெயில் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:

மத்திய அரசை கண்டித்து நாளை நடைபெற உள்ள முழு அடைப்பை முன்னிட்டு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புகுழு சார்பில் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், துணை செயலாளர் செங்குட்டுவன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சேவையா, துணை செயலாளர் துரை.மதிவாணன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மாதர் சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி, விஜயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இது தவிர மின்சார திருத்த மசோதா, சுற்றுச்சூழல் வரைவு மசோதா, தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பு, மீன் வள மசோதா, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட வற்றை எதிர்த்து நாளை முழு அடைப்பு நடைபெறுகிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்திலும் பஸ் மறியல், ரெயில் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News