செய்திகள்
சாப்பாட்டில் வெங்காயம் வேண்டாம் - சமையல்காரரிடம் அறிவுறுத்திய வங்காளதேச பிரதமர்
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, சாப்பாட்டில் வெங்காயம் சேர்க்க வேண்டாம் என தனது சமையல்காரரிடம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் வெங்காயம் விலை கடந்த வாரம் அதிகரித்தது. ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதையடுத்து, வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
அதில் ஒருபகுதியாக, மத்திய அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதை அறிந்தார்.
இந்நிலையில், பொருளாதார நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை.
வெங்காய ஏற்றுமதி தடையால் வங்காளதேசத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முன் தகவல் தெரிவித்தால் முன்னேற்பாட்டுடன் இருக்க உதவும்.
ஆனாலும் நான் எனது சமையல்காரரிடம் , சாப்பாட்டில் வெங்காயம் சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளேன் என குறிப்பிட்டார்.