ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீசார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி - 4 பேர் மீது வழக்கு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக செந்தூரபாண்டி பணியாற்றி வருகிறார்.
நேற்று அதிகாலை மூக்கையூர் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பணியில் இருந்த ஏட்டு செந்தூரபாண்டி, போலீஸ்காரர் சக்திகணேஷ் ஆகியோர் அங்கு சென்றார்.
வழியில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸ்சார் அவர்களிடம் இருந்த மொபைல் போனை கைப்பற்றினர்.
சிறிது நேரத்தில் மணல் ஏற்றிய நிலையில் ஒரு டிராக்டர் வந்தது. டிராக்டரை நிறுத்துமாறு சைகை செய்தும் நிறுத்தாமல் போலீசார் மீது மோதுவது போல் ஓட்டி வந்தனர்.
சட்டென விலகிய போலீசார் இருசக்கர வாகனத்தில் டிராக்டரை பின்தொடர்ந்தனர். ஓடும் டிராக்டரில் செந்தூர பாண்டி ஏறினார்.
டிராக்டரில் அமர்ந்திருந்த ஒருவர் டிராக்டரில் இருந்த மணலை ஏட்டு செந்தூரபாண்டி முகத்தில் வீசினார். இதில் நிலை தடுமாறிய ஏட்டு செந்தூர பாண்டி ரோட்டில் கீழே விழுந்தார். காலில் பலத்த காயம் அடைந்த அவர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சாயல்குடி போலீசில் ஏட்டு செந்தூரப்பாண்டி புகார் அளித்தார். இதன்பேரில் எஸ்.நொம்பகுளம் வினித் முருகன், மேலச்செல்வனூர் செந்தில்குமார் மற்றும் இருவர் மீது இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகிறார்.
இந்த நிலையில் மூக்கையூர் பகுதியில் மறைவான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.