ஆன்மிகம்
முககவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு தரிசனம் செய்த பக்தர்களை படத்தில் காணலாம்.

மீனாட்சி அம்மனை காண திரண்ட பக்தர்கள்

Published On 2020-09-02 07:04 GMT   |   Update On 2020-09-02 07:04 GMT
5 மாதங்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால் மீனாட்சி அம்மனை காண பக்தர்கள் திரண்டனர். மீண்டும் இலவச லட்டு பிரசாதம் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக அதிகாரி விளக்கம் அளித்தார்.
கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இறுதியில் கோவில்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து சிறிய கோவில்கள் கடந்த மாதம் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு அடுத்தக்கட்ட தளர்வாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நேற்று முதல் தரிசனம் நடைபெறும் என்று அறிவித்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரிய கோவில்களில் தரிசனத்துக்கான ஏற்பாட்டு பணிகள் நேற்று முன்தினம் மும்முரமாக நடந்தன.

மதுரை மீனாட்சி அம்மனை காண அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கோவில் அருகே திரண்டு காத்திருந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசாரும், கோவில் நிர்வாகமும் வரிசையாக நிறுத்தி வைத்து காலை 6 மணிக்குத்தான் உள்ளே அனுமதித்தார்கள்.

பக்தர்களின் உடல்நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக இடைவெளி விட்டு நின்று கோவிலுக்குள் சென்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை தரிசனம் செய்தனர். அங்கு பக்தர்கள் தீபாராதனை தட்டினை வணங்கி அதில் வைத்திருந்த குங்குமம், விபூதி பிரசாத பாக்கெட்டுகளை எடுத்து கொண்டனர். யாருக்கும் கையில் விபூதி, குங்குமம் வழங்கப்படவில்லை.

அர்ச்சனைக்கு பூ, தேங்காய் பழம் போன்றவை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் எந்த இடத்திலும் பக்தர்கள் உட்காரவும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் கோவிலுக்குள் வரும் அனைவரையும் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

வயதானவர்களை போலீசார் வரிசையில் நிற்க விடவில்லை. இதனால் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை என்பதால் அந்த குழந்தைகளை பெற்றோர் கிழக்கு சித்திரை வீதியில் தனியாக விட்டுச்செல்லும் நிலையும் ஏற்பட்டது.

பக்தர்கள் அனைவரும் அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் வரிசையில் நின்ற பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்களை போலீசார் பாதுகாப்பு கருதி மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

இதனால் அந்த இடத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டது. பக்தர்கள் வெகுநேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலையும் ஏற்பட்டது. எனவே அந்த பகுதியில் கூடுதல் போலீசாரை நியமித்து பக்தர்களை விரைந்து கோவிலுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. ஒரே வாசல் வழியாக மட்டுமே தரிசனத்திற்கு அனுமதித்ததால் குறைவான பக்தர்களே உள்ளே செல்ல முடிந்தது எனவும், எனவே தெற்கு கோபுர வாசல் வழியாகவும் பக்தர்களை உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தரிசன ஏற்பாடுகள் குறித்து கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை கூறும் போது, “அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் சுவாமி-அம்மனை தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று பக்தர்கள் உள்ளே செல்கிறார்கள். தற்போது ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பக்தர்கள் சென்றார்கள் என்பதை கணக்கெடுத்து வருகிறோம். இதன் மூலம் இவ்வளவு பக்தர்களைத்தான் அனுமதிக்க முடியும் என்று முடிவு செய்யப்படும். அரசின் மறுஉத்தரவு வரும் வரை கோவிலில் இலவச லட்டு பிரசாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்
Tags:    

Similar News