செய்திகள்
நான் முதல்வருக்கான பந்தயத்தில் இல்லை: குஜராத் மாநில பா.ஜனதா தலைவர் சொல்கிறார்
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமாவைத் தொடர்ந்து அடுத்த முதல்வர் யார்? என்ற விவாதம் கட்சித் தலைவர்களிடையே எழுந்துள்ளது.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். பின்னர் பேசிய அவர், கட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பா.ஜ.க.-வின் கொள்கையின்படி பதவி விலகியதாக கூறினார்.
குஜராத் முதலமைச்சராக பணியாற்ற வாய்ப்பு தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய அவர், கட்சியில் இனி தனக்கு எந்தப் பொறுப்பை வழங்கினாலும் அதைச் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் குஜராத் மாநில பா.ஜனதா கட்சித் தலைவரும், நவ்சரி தொகுதி எம்.பி.யுமான சி.ஆர். பாட்டீல் கூறுகையில் ‘‘முதல்வராக இருந்த விஜய் ரூபானி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். என்னையும் சேர்த்து பலருடைய பெயர் அடுத்த முதலமைச்சர் பட்டியலில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் முதலமைச்சருக்கான பந்தயத்தில் நான் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
முதலமைச்சருடன் இணைந்து கட்சி புதிய முதல்வரை நியமனம் செய்யும். நாங்கள் அடுத்த தேர்தலில் 182 இடங்களிலும் வெற்றி என்ற இலக்கை எட்டுவோம். இதற்காக கட்சியை வலுப்படுத்துவோம்’’ என்றார்.