செய்திகள்
கோப்புபடம்

அ.தி.மு.க.விற்கு விசுவாசமாக இருப்பேன்-தனபால் எம்.எல்.ஏ., பேட்டி

Published On 2021-07-16 12:13 GMT   |   Update On 2021-07-16 12:13 GMT
அ.தி.மு.க.வில் இருந்து நான் மாற்று கட்சிக்கு செல்ல இருப்பதாக வாட்ஸ்-அப்பில் என்னை பற்றிய வதந்தி பரவுகிறது.
அவினாசி:

அவினாசி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., தனபால் முதல்முறையாக அவினாசி எம்.எல்.ஏ.,அலுவலகத்திற்கு வந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் இருந்து நான் மாற்று கட்சிக்கு செல்ல இருப்பதாக வாட்ஸ்-அப்பில் என்னை பற்றிய வதந்தி பரவுகிறது.

அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 1972-ல் மாணவ பருவத்தில் இருந்து அ.தி.மு.க இயக்கத்தில் இருக்கிறேன். 45 ஆண்டுகால என் வரலாறு தெரியாத யாரோ தவறான செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் எந்த மாற்றத்தையும் விரும்பாதவன் நான். எந்த பதவியையும் பெரிதாக விரும்பியது இல்லை.

இந்த இயக்கம் எனக்கு 7 முறை சட்ட மன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் மற்றும் துணை சபாநாயகர், சபாநாயகராகவும் நியமித்துள்ளது. இந்த இயக்கம் என்னை நன்றாக வைத்திருக்கிறது. நான் சார்ந்த இயக்கம் என்னை பெருமைபடுத்தியிருக்கிறது. ஆகவே இந்த இயக்கத்திற்கு நான் விசுவாசியாக இருப்பேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இது போன்ற வதந்திகளுக்கு எனது வாழ்க்கையில் இடமே இல்லை. நான் இந்த செய்தியை மறுக்கிறேன். இனிமேல் இது போன்ற வதந்திகள் வராது என நம்புகிறேன் என்றார். அப்போது ஒன்றிய குழு தலைவர் ஜெகதீசன், சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி, எ.சி.எம்.எஸ் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News