செய்திகள்
தற்கொலை முயற்சி

பரமத்தி அருகே மனைவியை தாக்கிய கணவன் தற்கொலை முயற்சி

Published On 2021-07-18 09:09 GMT   |   Update On 2021-07-18 09:09 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவன் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கோனூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் ராஜூ என்கிற வரதராஜ் (65). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி இறந்துவிட்டதால் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

கீழ்சாத்தம்பூர் பெருமாபாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சம்பூர்ணம் (55). இவருக்கு 2 கணவன்கள்.. அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர். இதனால் சம்பூர்ணம் தனிமையில் வசித்து வந்துள்ளார். அவரின் முதல் கணவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் வரதராஜூக்கும் சம்பூரணத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 வருடத்திற்கு முன் இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக குடும்பம் நடத்தி வருகின்றனர். இதில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று மீண்டும் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வரதராஜ் தனது மனைவி சம்பூரணத்தை அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் சம்பூரணத்திற்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி வீட்டிற்கு முன்பு கிடந்தார்.

இதை தொடர்ந்து சம்பூர்ணம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்பு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மனைவியை கம்பியால் தாக்கி விட்டு வீட்டில் இருந்த வரதராஜ் போலீசாருக்கு பயந்து வீட்டுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் வி‌ஷம்அருந்தி மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து கீழ்சாத்தம்பூர் கிராம நிர்வ அலுவலர் மகேஸ்வரி பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வி‌ஷம் குடித்த வரதராஜ் வயிற்றில் கத்தியால் குத்தியும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News