செய்திகள்
மூன்றாம் காலாண்டில் மட்டும் 2.4 பில்லியன் டாலர்கள் இழப்பு - திணறும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மூன்றாம் காலாண்டில் மட்டும் 2.4 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.
வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன.
ஒரு சில விமான நிறுவனங்களுக்கு அந்நிறுவனத்தை சேர்ந்த நாடுகள் நிதி உதவி செய்து வருகின்றன. இதனால் விமான ஊழியர்களின் வேலை உறுதிபடுத்தப்பட்டு வருகிறது. மேலும், சில விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இயல்பான விமானப்போக்குவரத்து நடைபெறாததால் பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்சும் கொரோனா காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்நிறுவனம் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மூன்றாம் காலாண்டின் கணக்கு விவரங்களை வெளியிட்டது.
அதில், மூன்றாம் காலாண்டில் மட்டும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வருமானம் 73 சதவீகிதம் குறைந்துள்ளது. அதாவதும், இந்த காலாண்டில் மட்டும் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இதுவரை 19 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 20 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது நீண்டகால விடுமுறையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.
முன்னதாக, நிலைமையை சரிகட்ட 5.5 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கடனாக வழங்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.