செய்திகள்
ஒத்தக்கடை விபத்து

ஒத்தக்கடை அருகே கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலி

Published On 2021-11-25 09:10 GMT   |   Update On 2021-11-25 09:10 GMT
ஒத்தக்கடை அருகே பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது கார் மோதிய விபத்தில் அவர் பலியானார். 2 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலூர்:

மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகள் தாரணி. இவர் ஒத்தக்கடை அருகே நெல்லியேந்தல்பட்டியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று கல்லூரி முடித்து விட்டு பஸ் ஏறுவதற்காக கல்லூரி முன்புள்ள 4 வழிச்சாலை பஸ் நிறுத்தத்தில் தாரணி நின்று கொண்டிருந்தார்.

அப்போது பாண்டிச்சேரியில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவி தாரணி மற்றும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவி செல்லூர் சுயராஜ்யபுரத்தைச் சேர்ந்த லாவண்யா, கப்பலூரைச் சேர்ந்த மாணவர் நிதிஷ் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த தாரணி இன்று காலை பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் வழக்குப்பதிவு செய்து காரில் வந்த பாண்டிச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை கைது செய்துள்ளார்.

Tags:    

Similar News