அழகுக் குறிப்புகள்
முகப்பரு

முகப்பருக்களை இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி?

Published On 2022-02-11 03:38 GMT   |   Update On 2022-02-11 03:38 GMT
முகப்பரு விஷயத்தில் சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் முகத்தில் கரும்புள்ளிகள், ஆழமாக தழும்புகள் ஏற்பட்டு விகாரமான தோற்றத்தை ஏற்படுத்தும்.

பெண்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் ஒரு விஷயம் முகப்பருக்கள் ஆகும். உங்களுக்கு அதில் உடன்பாடில்லை என்றால், தங்களுக்கு பிடித்த சாக்லேட் சாப்பிடுவதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிப்பவரையும், சாக்லேட் சுவைத்தப்பின் பயந்தபடியே முகத்தை பார்ப்பவரையும் கேட்டுப் பாருங்கள்! அவர்கள் பல வகையான உணவுகளை உண்ணவே அச்சப்படுவார்கள். அவை முகத்தை அழகின்றி ஆக்குவதுடன் வலியையும் தருகின்றன.

பருக்களை விரட்ட அளிக்கும் டிப்ஸ்கள் இதோ:

1. ரோஸ் வாட்டர் மற்றும் ஆஸ்ட்ரிஞ்சன்ட்

எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்களுக்கு அதிகம் பருக்கள் உண்டாக வாய்ப்பிருக்கிறது. அதனால் சருமத்தில் எண்ணெய் பசை ஏற்படுவதை தவிர்ப்பது அவசியம். தினசரி இருமுறையாவது முகத்தை நல்ல தரமான பேஸ் வாஷ் (Face Wash) கொண்டு கழுவ வேண்டும். முகத்திற்கு ரோஸ் வாட்டரை கீழே கூறியபடி உபயோகப்படுத்தவும்:

நல்ல தரமான ரோஸ் வாட்டர் மற்றும் ஆஸ்ட்ரிஞ்சன்ட் எடுத்துக் கொள்ளவும்.
முகத்தில் மெதுவாக தடவவும்.
தினசரி இரு முறை இதை செய்யவும்.

2. மஞ்சள் மற்றும் தயிர்

மஞ்சள், தயிர் இரண்டுமே மருத்துவ மற்றும் காயங்களை குணமாக்கும் தன்மைகள் உடையது. அவை பருக்களை விரட்டி தூய்மையான சருமத்தை அளிக்கும். இவற்றை உபயோகிக்கும் முறை :

இரண்டையும் குழைத்து பேஸ்ட் ஆக்கவும்.
முகத்தில் சமமாக பூசவும்.
15-20 நிமிடங்கள் கழித்து, கழுவவும்.

3. சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ்ட்

சந்தனத்திற்கு  வலியை குறைக்கும் தன்மையும் பரு மற்றும் மாசுவை நீக்கும் சக்தியும் உண்டு. அதை பின் வருமாறு உபயோகிக்கவும்:

சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டருடன் கலந்து குழைக்கவும்.
உங்கள் நெற்றி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும்.
ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.
 
4. வேப்பிலை

வேப்பிலை உங்களுக்கு தூய்மையான, அப்பழுக்கற்ற சருமத்தை அளிக்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினி. அதை உபயோகிக்கும் முறை:

சில வேப்பிலைகளை எடுத்து நன்கு கழுவவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அந்த இலைகளைப் போட்டு, அடுப்பை லேசாக எரிய விட்டு சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
அந்த நீரின் நிறம் மாறத் தொடங்கும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
அந்த நீரை ஆற விடவும் பின் வடிகட்டி அந்த நீரில் தினமும் முகத்தை கழுவவும்.

5. வெள்ளரி சாறு

வெள்ளரிசாறு முகத்தில் சுரக்கும் எண்ணெய் பசையை கட்டுபடுத்துகிறது. அதன் குளிர்ச்சி தன்மை உங்கள் சருமத்தை குளிர்வித்து ஈரத்தன்மை அளிக்கிறது. அதை உபயோகிக்கும் முறை:

இரண்டு மேசைக் கரண்டி வெள்ளரிச் சாருடன் ஒரு மேஜைக்கரண்டி பால் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
ஒரு பருத்தி பஞ்சு பந்தை இந்த சாறில் முக்கி முகத்தை துடைக்கவும்.
இது உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்ய உதவும்.
 
மேற்கூறிய குறிப்புகளுடன், நாம் தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை:

நிறைய நீர் அருந்துங்கள்.
உடல் தூய்மை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு உங்கள் முக தூய்மையும் அவசியம்.
மன அழுத்தமும் பருக்களை உண்டாக்கும் என்பதால், மன அழுத்ததிலிருந்து விலகி இருங்கள்.
துரித உணவு / ஜங்க் உணவை தவிர்த்து விடுங்கள்.
Tags:    

Similar News