செய்திகள்
இறுதி சோதனையில் 95 சதவீதம் பயனளித்துள்ளது: பைசர் நிறுவனம்
அமெரிக்க- ஜெர்மனி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் பயனளிப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த தடுப்பு மருந்து, இறுதி கட்ட பகுப்பாய்வு தரவுகளின்படி 95 சதவீதம் திறன் வாய்ந்தது என்று மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளதாகவும் மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
170-பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்ததில் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக கூறிய பைசர் நிறுவனம் வயதானவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதாகவும், தீவிர பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
தடுப்பு மருந்து அனைத்து தரப்பினருக்குமானது என்று நிறுவனம் தரப்பில் அறிவித்தாலும், பைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பு மருந்து மைனஸ் 70 டிகிரி குளிர் நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்தியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் காலநிலை அளவு அதிகமாகவே உள்ளது. மேலை நாடுகளில் குளிர் நிலவுவதால் அங்கு இவற்றை பாதுகாப்பது மிக எளிது. ஆனால் வெப்ப மண்டலங்களில் இந்த தடுப்பு மருந்துகளை எடுத்துச்செல்வது மிகக்கடினம்.
ஆகவே இதனை ஆசிய நாடுகள் விலை கொடுத்து வாங்கினாலும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இதனைக் கொண்டுசேர்ப்பது, மேலும் பாதுகாப்பது கடினமான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. இது தற்போது பைசர் நிறுவனத்துக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முந்தைய பரிசோதனை முடிவில் பைசர் மருந்து 92 சதவீதம் பயனளிப்பதாக தெரிவித்திருந்தது. ரஷியாவின் ஸ்புட்னிக்-5 மருந்தும் 95 சதவீதம் பயனளிப்பதாக தெரிவித்துள்ளது.