உள்ளூர் செய்திகள்
பைக் மீது லாரி மோதி போலீஸ்காரர் சாவு
குடியாத்தம் அருகே பைக் மீது லாரி மோதியதால் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் சுண்ணாம்பு பேட்டை உண்டியல் தர்மய்ய நாயுடு தெருவைச் சேர்ந்தவர் பக்தவச்சலம் ஓய்வு பெற்ற சப்&இன்ஸ்பெக்டர்.இவரது மகன் பாலாஜி (வயது 36). 2010-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வநதார்.
குடியாத்தம் அடுத்த சைனகுண்டா சோதனை சாவடியில் பணி முடித்துவிட்டு நேற்று காலை மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார் கொட்டமிட்டா கிராமம் அருகே எதிர் திசையில் ஆந்திரா நோக்கி சென்ற மினி லாரி அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பாலாஜி இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் மேலும் விபத்தில் பலியான பாலாஜியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆந்திர மாநிலம் பலமனேரியில் விபத்தை ஏற்படுத்திய லாரியை குடியாத்தம் தாலுகா போலீசார் கைப்பற்றினர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வெங்கடாஜலபதி (வயது 36) என்பவரை கைது செய்தனர்.
பாலாஜியின் உடலுக்கு இன்று காலையில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் அஞ்சலி செலுத்தினார். பாலாஜிக்கு லாவண்யா என்ற மனைவியும், 3 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.
பொங்கல் தினத்தன்று போலீஸ்காரர் பாலாஜி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.