செய்திகள்
மகாலட்சுமி

பெரம்பலூரில் பட்டதாரி ஆசிரியர் மனைவி தீக்குளித்து தற்கொலை

Published On 2021-01-13 04:53 GMT   |   Update On 2021-01-13 04:53 GMT
பெரம்பலூரில் அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியரின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மகள்கள் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டதால் உயிர் தப்பினர்.
பெரம்பலூர்:

நாமக்கல் மாவட்டம் தோளூர்பட்டியை சேர்ந்தவர் குமார். இவர் பெரம்பலூர் அருகே உள்ள எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி(வயது 35). இவர் மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு ஜெயஸ்ரீ(10), மோனிகா(2) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் முத்துநகர் கிழக்கு 2-வது தெருவில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் குமார் வசித்து வருகிறார். மகாலட்சுமி மன இறுக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குமார் நேற்று காலை திருச்சியில் உடல்நலக்குறைவாக இருந்த தனது உறவினரை பார்க்க சென்றுவிட்டார். இதையடுத்து மகாலட்சுமி பக்கத்து வீட்டில் இருந்து ஒரு கேனில் மண்எண்ணெய் வாங்கி வந்துள்ளார். பின்னர் வீட்டு கதவை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டு, தனது மகள்கள் ஜெயஸ்ரீ, மோனிகா ஆகியோர் மீது மகாலட்சுமி மண்எண்ணெயை ஊற்றி தீவைக்க முயன்றார். ஆனால் ஜெயஸ்ரீ, மோனிகாவுடன் அங்கிருந்து ஓடி, வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள்.

இதைத்தொடர்ந்து மகாலட்சுமி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அறைக்குள் இருந்து வெளியே வந்த ஜெயஸ்ரீயும், மோனிகாவும், மகாலட்சுமி தீயில் எரிவதை பார்த்து சத்தம் போட்டனர். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மகாலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையே அக்கம், பக்கத்தினர் இது பற்றி திருச்சியில் இருந்த குமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் பெரம்பலூருக்கு திரும்பினார். வீட்டில் தீக்குளித்து கரிக்கட்டையாக கிடந்த மனைவியின் உடலை பார்த்து குமார் கதறி அழுதது, அதனை பார்த்தவர்களுக்கும் கண்ணீரை வரவழைத்தது.

பெரம்பலூர் போலீசார், மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகாலட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News