செய்திகள்
கொலை

பேரணாம்பட்டு அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை- 3 பேர் கைது

Published On 2021-01-11 06:42 GMT   |   Update On 2021-01-11 07:48 GMT
பேரணாம்பட்டு அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேர்ணாம்பட்டு:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சாமரிஷிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 24) மேளம் அடிக்கும் தொழிலாளி.

இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த். ஹேமந்துக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி நேற்று இரவு அவரது வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரையில் ஹேமந்த் பிறந்தநாளை அஜித் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது எம்.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் வில்சன் சுதாகர் என்பவரது மகன் ராபின் (27) மற்றும் ரீகன் ராஜ் (40) சின்னா என்கிற சதீஷ்குமார் (23) ஆகியோர் பைக்கில் வந்தனர்.

பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த அஜித் தரப்பினரிடம் அவர்கள் இங்கே ஏன் பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள் என கேட்டுள்ளனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராபின், ரீகன் ராஜ், சின்னா ஆகியோர் அஜித்தை பேனா கத்தியால் வயிற்றில் குத்தினர்.

இதனை தடுக்க முயன்ற அஜித்தின் சித்தப்பா வேலு என்பவரையும் கத்தியால் குத்தினர். இதில் அவரது குடல் சரிந்தது. இதனையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

பொதுமக்கள் படுகாயமடைந்த அஜித் மற்றும் வேலு ஆகியோரை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அஜித் பரிதாபமாக இறந்தார்.

வேலு மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து ராபின், ரிகன் ராஜ், சின்னா என்கிற சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News