ஆன்மிகம்
சிவன்

செய்த பாவங்களுக்கான கர்ம வினைகளை நீக்கும் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ விரதம்

Published On 2020-09-15 04:49 GMT   |   Update On 2020-09-15 04:49 GMT
ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ தினமான இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சிவபெருமானை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ தினங்களில் இருக்கின்றன. அதில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை வழிபடும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். ஆவணி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து சிவபெருமான், நந்தி பகவான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.

பிறகு நந்தி தேவருக்கு அருகம்புல், வெல்லம் கலந்த அரிசியையும், சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். பிரதோஷங்களில் சனிக்கிழமை அன்று வருகின்ற சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது.

அதிலும் இன்று வருகின்ற ஆவணி தேய்பிறை பிரதோஷமானது சனி பகவானுக்குரிய பூசம் நட்சத்திரத்தில் வருவதால், அன்றைய தினத்தில் சிவன் கோயிலிலேயே இருக்கின்ற நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, வழிபாடு செய்வதால் சனி பிரதோஷத்தன்று சிவபெருமான், நந்தி தேவரை வழிபட்ட பலனை பெற முடியும். அஷ்டம சனி, ஜென்ம சனி போன்ற சனி கிரக தோஷங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பாதகங்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.மேலும் மாத சிவராத்திரி தினமும் ஆவணி தேய்பிறை பிரதோஷ தினத்திலேயே வருவது மிகவும் சிறப்பானதாகும். எனவே அன்றைய தினத்தில் பிரதோஷ வழிபாடு தவறாமல் செய்வதால் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும்.

பிரதோஷ வழிபாடு முடிந்ததும் உங்கள் சக்திக்கேற்ப பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு சுண்டல், கேசரி போன்ற பிரசாதங்களை வழங்குவது சிவபெருமான் மற்றும் சனி பகவான் ஆகியோரின் அருட்கடாட்சத்தை உங்களுக்கு கொடுக்கும். ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை விரதம் இருந்து வணங்குபவர்களுக்கு செய்த பாவங்களுக்கான கர்ம வினைகள் நீங்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் நல்ல வருமானம் உண்டாகும். குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். கல்வி, தொழில் போன்றவற்றில் மேன்மையான நிலை ஏற்படும்.
Tags:    

Similar News