செய்திகள்
காட்டாங்கொளத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பலி
காட்டாங்கொளத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 26) , இவர் பல்லாவரத்தில் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் மது குடித்து விட்டு காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள ஒரு கிணற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கிணற்றில் மூழ்கினார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இது குறித்து உடனடியாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி இறந்துபோன எல்லப்பனின் உடலை சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து எல்லப்பன் குடிபோதையில் குளிக்கும் போது கிணற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது யாராவது அவரை கிணற்றில் தள்ளிவிட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.