ஆன்மிகம்
மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி தூக்கிச் செல்லும் காட்சி.

வீரமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

Published On 2021-03-03 09:32 GMT   |   Update On 2021-03-03 09:32 GMT
மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி தூக்கிச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணை ஆற்றங்கரையில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. காப்புக் கட்டியதுடன் ஒவ்வொரு வீட்டிலும் மண் சட்டிகள் உள்பட பல்வேறு பாத்திரங்களில் நவதாணிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்த முளைப்பாரியை, தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் கிராம மக்கள் நேற்று ஊர்வலமாக தூக்கிச் சென்று மண்ணடித் திடல், கல்லணை கரையோரம் உள்ள பெரிய குளத்தில் விட்டனர்.

மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா மேலும் ஒரு வாரம் நடக்க உள்ளது. இதில் செரியலூர் கிராமத்தில் மண்பாண்டக் கலைஞர்களால் செய்யப்பட்டு வரும் மண் குதிரை, காளைகள் மற்றும் தெய்வங்களின் சிலைகளை மேற்பனைக்காடு கிராம மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் அய்யனார் கோவிலுக்கு தூக்கிச் செல்லும் நிகழ்வுகளும், பாட்டவர் கோவிலில் கல் பொங்கல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிராம மக்களால் நடத்தப்படும் மது எடுப்புத் திருவிழா வருகிற 10-ந் தேதி நடத்தப்பட உள்ளது.
Tags:    

Similar News