ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கு- தியேட்டர், ஷாப்பிங் மால்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதி
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரிகளிடையே பேசுகையில்:-
மாநிலத்தில் தோற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். இந்த மையத்தில் டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் என அனைத்து வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
வெளியில் சுற்றுபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிவதை கண்காணிக்க வேண்டும். ஆந்திர மாநில பஸ்களில் முக கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு ரூ.50 அபராதம் விதிக்க வேண்டும்.
இதற்காக டிக்கெட் கொடுக்கும் எந்திரத்தில் புதியதாக ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆந்திராவில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்து அமல்படுத்துங்கள் என்றார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பையொட்டி ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.