செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே வாகனம் மோதி ஒருவர் பலி
கிருஷ்ணகிரி அருகே வாகனம் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
தேன்கனிக்கோட்டையை அடுத்த ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 52). சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று மாலை அவர் தனது மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மிட்டப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்த தமிழ்ச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.